×

வடசென்னை பகுதிகளில் போதைப்பொருள் விற்ற பாஜ நிர்வாகி கைது: மேலும் 3 பேர் சிக்கினர்

சென்னை: வடசென்னை பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்த பாஜ நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வடசென்னை பகுதிகளில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க, நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொருக்குப்பேட்டை நைனியப்பன் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில், போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொருக்குப்பேட்டை ஆய்வாளர் யுவராஜ் தலைமையில் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தினர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மாவா, குட்கா உள்ளிட்டவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான கொருக்குப்பேட்டை கேசவ கிராமணி தெருவை சேர்ந்த பச்சையம்மாள் (34), வீட்டில் சோதனை செய்தபோது 25 கிலோ ஹான்ஸ், 2 கிலோ மாவா, 30 கிலோ ஜர்தா இருப்பது தெரிந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பச்சையம்மாளை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், கொருக்குப்பேட்டை கேசவ கிராமணி தெருவை சேர்ந்த ராயபுரம் பாஜ கிழக்கு மண்டல பொருளாளர் ராஜேந்திரன், லோகேஷ் (29), நரேந்தர் (24) ஆகியோரையும் கைது செய்தனர். விசாரணையில், பாஜ பிரமுகர் ராஜேந்திரன், வட சென்னை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவியாக செயல்பட்டது தெரியவந்தது.

அவர்கள் 4 பேரையும், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய முனியம்மாள் (எ) தேவி (46), சத்யா ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கைதான லோகேஷ், நரேந்தர் ஆகியோர் முனியம்மாளின் மகன்கள் என்பதும், இவர்கள் குடும்பமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்ததாக பாஜ நிர்வாகி கைதான சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வடசென்னை பகுதிகளில் போதைப்பொருள் விற்ற பாஜ நிர்வாகி கைது: மேலும் 3 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : BJP ,North Chennai ,CHENNAI ,Gutka ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கடல் சீற்றத்தால் வடசென்னையில் சாலை துண்டிப்பு..!!